திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தபுரத்தில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் கட்டிடம் ஒன்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில், தேநீர் கடை, பழச்சாறு கடை மற்றும் சிற்றுண்டி கடை செயல்பட்டு வந்தது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை உடனே அகற்றுமாறு ரெயில்வே துறை சார்பாக 12 நாட்களுக்கு முன்பே முறையான நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் சேகர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாரின் பாதுகாப்புடன் ரெயில்வே துறை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.