கோவை,
கோவையை சேர்ந்த 16 வயது மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அந்த மாணவி, எப்போதும் செல்போன் பயன்படுத்தி வந்ததை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் அந்த மாணவி காதலனுடன் செல்ல முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி, காதலனுடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச்-ஆப் செய் யப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே தனது காதலனை பார்க்க மாணவி பஸ்சில் சென்றார். அந்த பஸ் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சென்றபோது திடீரென்று பழுதானது. அதில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் மாற்றி அனுப்பி விடப்பட்டனர்.
இந்த நிலையில் தனது முடிவை மாற்றிக்கொண்ட அந்த மாணவி, காத லனை பார்க்க செல்லாமல் கோவைக்கு திரும்பினார். அந்த மாணவியின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடியபோது அவர் கோவைக்கு வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்று அந்த மாணவியை மீட்டனர். பின்னர் அவருக்கு தகுந்த அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.