கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பழக்கம்: ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபர் - போக்சோவில் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மைசுலான். இவருடைய மகன் கருப்பசாமி (22 வயது). இவருக்கு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வீட் டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், வாசுதேவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் நெருங்கி பழகிய கருப்பசாமி, ஆசை வார்த்தை கூறி சிறுமியை விருதுநகருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

உடனே போலீசார் அங்கு சென்று தேடிய நிலையில், கருப்பசாமியுடன் சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர். சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து புளியங்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.