தமிழக செய்திகள்

‘பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்களை கொடுக்கலாம்’ - நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

கிடைத்த எல்லா வாய்ப்பிலும் தனக்கு வழித்துணையாக வந்தது புத்தகங்கள்தான் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

“விழாக்களில் மரியாதை செய்யும்போது பொன்னாடை போர்த்துகிறார்கள். என்னுடைய வீட்டில் இப்போது மூட்டை மூட்டையாக பொன்னாடைகள் இருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. பொன்னாடைக்கு போர்த்துவதற்கு பதிலாக புத்தகங்களை பரிசாக கொடுக்க நாம் முயற்சி செய்யலாம்.

என்னுடைய வீட்டிலும், அலுவலகங்களிலும் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஏழை, எளிய வீட்டுப் பிள்ளையாக பிறந்த நான், பள்ளியில் ஒரு மக்கு மாணவனாகவே இருந்தேன். மெல்ல கற்கும் குழந்தையாக, தன் வேகத்தில் கற்கும் குழந்தையாக இருந்தேன். ஆனால் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினேன். 50 பேர் முன்னால் பேசுவது மட்டும்தானா பேச்சு? 5 பேர் முன்னிலையில் கூட பேசினேன். சிறிய மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

நான் அமைச்சராவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால் என்னைப் பார்த்தவுடன் ஒருவர் என்னால் முடியும் என்று நம்பினார். தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ற மாமனிதரால் இன்று நான் அமைச்சராகி இருக்கிறேன். கிடைத்த எல்லா வாய்ப்பிலும் எனக்கு வழித்துணையாக வந்தது புத்தகங்கள்தான். என் வீட்டில் பதக்கங்களோ, கோப்பைகளோ இருக்காது. ஆனால் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் இருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.