தமிழக செய்திகள்

மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து குடும்பத்தினருக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு

கரிசல்பட்டியில் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது.

சிவகங்கை,

கந்தூரி விழா

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டியில் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் மிலாது நபியையொட்டி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நோய் இன்றி நலமுடன் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு துவா ஓதப்பட்டு விழா தொடங்கியது. விழாவில் 75 ஆடுகள் வெட்டப்பட்டு கறிக்குழம்பு தயார் செய்யப்பட்டது.

வாளிகளில் நெய்ச்சோறு

தொடர்ந்து 1000 கிலோ ஆட்டிறைச்சி, 800 கிலோ அரிசி, 100 கிலோ நெய், 3 ஆயிரம் முட்டைகளுடன், சுமார் 4 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் நெய்ச்சோறு தயார் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண நிறமுடைய சுமார் 700 வாளிகளில் ஒவ் வொன்றிலும் சுமார் 5 கிலோ நெய் சோறுடன் 4 முட்டைகள் வைத்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. தனியாக மட்டன் கறிக்குழம்பும் வழங்கப்பட்டது.

இதனை கரிசல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கிச்சென்றனர். தொடர்ந்து அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. இந்த மதநல்லிணக்க கந்தூரி விழாவையொட்டி கரிசல்பட்டி கிராமம் முழுவதும் நெய்ச்சோறு கமகமத்தது.

SCROLL FOR NEXT