ஈரோடு,
ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பியை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சரியாக சாப்பிடாமல் அடிக்கடி வாந்தி எடுத்தது. இதனால் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கடந்த மாதம் 24-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ குழுவினர் சுமார் 1 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த இரும்பு கம்பியை பத்திரமாக அகற்றினர். இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை குணமடைந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.