தமிழக செய்திகள்

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! - மாணிக்கம் தாகூர்

பிரதமரும், மராட்டிய முதல்-மந்திரியும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

நீட் விவகாரத்தில் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வினாத்தாள் பேரம்

பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன!

மராட்டியம் லாத்தூர் மருத்துவமனையில் ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) (Samsung Fold7) போனில் 132 கேள்விகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கசிந்துள்ளன. மேலும் ரூ.30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை வாட்ஸ்அப் வழியே பரவியுள்ளது என சிபிஐ அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ்சும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஒரு பயனும் இல்லை!

இதையெல்லாம் மறைக்க நேற்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட "ஹேக்-ப்ரூப்/ஆண்டி-பேப்பர் லீக்" சட்டமும், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் போன்ற காகித அறிவிப்புகளும் வெறும் கண் துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை! வினாத்தாள் கசிவைத் தடுக்கத் துப்பில்லாத பாஜக அரசு கொண்டு வரும் இந்த போலி சட்டங்களால் ஒரு பயனும் இல்லை!

கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.