சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.46 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகி இருந்தது. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜ், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருக்கோயில் உதவி ஆணையாளர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமுர்த்தி பூசாரி, ஆணையர் அலுவலக பிரதிநிதி ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை கணக்கிடப்பட்டது. அதில் ரூ.46,55,266 ரொக்க பணமும், தங்கம் 71.700 கிராம், வெள்ளி 502 கிராம் கிடைத்தது. உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.