கிருஷ்ணகிரி,
த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என்பதை பார்க்க முடிவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் த.மா.கா மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று அரசியல் களம், தி.மு.க., அ.தி.மு.க. என்ற நிலையில் மாறி, 60 ஆண்டுகளுக்கு பிறகான மாற்றத்தை கண்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து, மக்கள் மாற்றத்தை விரும்பி உள்ளனர். இதில், கூட்டணி கட்சிகளும் மாறித்தான் இருக்கின்றன. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது இல்லை.
வரும் தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியோடு தான் செல்லும். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் தான் மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது தெரியும். ஓட்டு போட்டவர்கள் அதே மனநிலையில் இருப்பதில்லை.
த.மா.கா.வை பொருத்தவரை தற்போது கட்சியை வலுப்படுத்தி, தொய்வாக உள்ள பகுதிகளில் தீவிர பணியாற்றி, வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் கூட்டணியில் சீட் பெற்று, உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்த வேண்டும். தெளிவுத் தன்மையோடு செயல்பட்டால்தான் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடியும்.
தேர்தல் நெருங்கும்போது கட்டாயமாக அதற்குண்டான அறிவிப்பை கட்சியில் கலந்து பேசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். த.வெ.க. ஆட்சிக்கு வந்து, 100 நாட்கள் மட்டுமே ஆகிறது. வரும் நாட்களில் நல்லதை செய்வார்கள் என்ற நம்பிக்கையும், ஊழல் குறைந்துள்ளது என்பதையும் பார்க்க முடிகிறது.
மின்கட்டணம், தனியார் பஸ் கட்டணம், வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் சிரமங்களையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேகதாது அணை விவகாரம், தொகுதி மறுவரையறை விவகாரங்களில் தமிழக அரசிற்கு த.மா.கா. துணை நிற்கிறது.
காவிரி பிரச்சினையில் நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை மதித்து கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும். இதில், அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசும் கூட்டும் என நம்புகிறோம். தண்ணீர் பெறுவது நம் உரிமை, அதை கொடுக்க வேண்டியது கர்நாடகத்தின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.