தமிழக செய்திகள்

தினம் ஒரு பாலியல் கொலை நடப்பதுதான் சாதனையா சி.எம். சார்? தவெக கடும் கண்டனம்

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என தவெக தெரிவித்துள்ளது.

சென்னை,

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிளஸ் 2 மாணவி கொடூரக் கொலை: இதுதான் உங்கள் 'நம்பர் ஒன்' சாதனையா சி.எம். சார்..?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மகளைக் காணவில்லை என இரவோடு இரவாகப் பெற்றோர் புகார் அளிக்க வந்தபோது, குளத்தூர் காவல் நிலைய போலீசார், நெஞ்சில் ஈரமில்லாமல் அலட்சியமாகப் பேசி, அதிகாரத் திமிருடன் திருப்பி அனுப்பியதாகச் செய்திகள் வருகின்றன. புகார் வந்தபோதே காவல்துறை தேடும் பணியைத் தொடங்கியிருந்தால், மாணவியை உயிரோடு மீட்டிருக்கலாம் எனப் பெற்றோர் கதறித் துடிப்பது ஆறாத் துயரமாக இருக்கிறது!

ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை தன் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறது. புகாரை வாங்க மறுத்துப் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழித்து அவமானப்படுத்தியிருக்கிறது காவல்துறை! நிரந்தர டி.ஜி.பி-யை நியமிக்காமல் நீங்கள் காலம் கடத்திக் கொண்டிருந்தால், கீழ் நிலையில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும் முதல்-அமைச்சரே?

எதிர்காலக் கனவுகளைச் சுமந்து பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். தினந்தோறும் 'பாலியல் வன்கொடுமை' எனத் தலைப்புச் செய்திகள் வருவது இந்த ஆட்சிக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பது உங்களுக்குத் தெரிகிறதா..?

நேற்று 14 வயதுச் சிறுமி, இன்று 17 வயதுச் சிறுமி என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்களை ஆழ்த்தியிருக்கிறது. மாநிலத்தில் இவ்வளவு குற்றங்களும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும்போது, முதல்-அமைச்சர் தன் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார். தினம் ஒரு பாலியல் கொலை நடப்பதுதான் உங்கள் சாதனையா சி.எம். சார்? மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாத இந்த ஆட்சி, விரைவில் மக்களால் அப்புறப்படுத்தப்படும். ஆட்சியாளர்களுக்கு வால் பிடிப்பதை விட்டுவிட்டு, இனியாவது காவல்துறை தன் பணியை விழிப்புடன் செய்ய வேண்டும்! என தெரிவித்துள்ளார்.