சென்னை,
ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா? என்று இயக்குநர் போஸ் வெங்கட் கேள்வி எழுப்பி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். தனக்கு கடந்த சில மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், கல்லூரியிலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து அரசை வலியுறுத்தினர்.
மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள காணொலி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அவரது படிப்புக்கு மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.19.50 லட்சம் செலவின கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக இயக்குநர் போஸ் வெங்கட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
5,000 கோடி ரூபாய்க்கு மேல் குடும்பச்சொத்தாக வைத்திருப்பதாகக் கூறிய லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் 34 இலட்ச ரூபாய் மதிப்பில் கார் வழங்குவதாக அறிவித்த வெட்கங்கெட்ட தவெக அரசு, மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்குக் கணக்குப் பார்ப்பதும், தயங்குவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.