சென்னை,
தமிழக சட்டமன்ற செயளாளர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாங்கள் 13.5.2026-ஆம் நாளன்று அளித்த தகுதிநீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளில் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் அவர்கள் 3.7.2026 அன்று முனைவர் இசக்கி சுப்பையா அவர்களையும் 9.7.2026 அன்று திருமதி சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரினார்கள்.
அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பார்வையில் காணும் இச்செயலக கடிதங்கள் மற்றும் தங்களின் கடிதங்களைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், கீழ்க்காணும் அட்டவணையின்படி பேரவைத் தலைவர் அவர்கள் அறையில் மேற்காணும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.