தமிழக செய்திகள்

தீபாவளி மதுவிருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி போதைக்காக ‘தின்னர்’ கலந்து குடித்ததால் பரிதாபம்

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த மதுவிருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலியானார்கள். போதைக்காக மதுவுடன் ‘தின்னர்’ கலந்து குடித்ததால் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (57), சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

தீபாவளி பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட 3 பேரும் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்து 3 பேரும் விடிய, விடிய மதுகுடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் அங்கேயே படுத்து தூங்கினர். காலையில் எழுந்ததும் மீண்டும் மது குடித்துள்ளனர்.

3 பேர் பலி

பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். சிறிது நேரத்தில் முருகானந்தம், பார்த்திபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், 3 பேரும் அதிக போதைக்காக விஸ்கியில், பெயிண்டுக்கு கலக்கும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் தொண்டையில் இருந்து வயிறு வரை அரிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT