தமிழக செய்திகள்

விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை கலங்க செய்கிறது-செல்வப்பெருந்தகை

பணிமனைகளில் முறையாக பராமரிப்பு பணிகள் செய்திருந்தால் இத்தகைய கோர சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை.

சேலம்,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பைக் மற்றும் டெம்போ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழந்திருப்பது அந்த குடும்பங்களின் வாழ்வையே பெருந்துயரத்தில் தள்ளும் மிகக் கொடிய சம்பவமாகும். விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை கலங்க செய்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக நலம்பெற விரும்புகிறேன்.

இந்த துயரச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். பேருந்துகள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட வேண்டும். பணிமனைகளில் முறையாக பராமரிப்பு பணிகள் செய்திருந்தால் இத்தகைய கோர சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.