கோவை,
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கமல்ல, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்குதான்.
கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்க எடுத்தது. முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது. தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர்; அவர்களுக்கு நன்றி
கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை.பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல.
எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. குற்றவாளிகளை ஒரு மதத்தை சேர்ந்தவர் என கூறவில்லை. ஐ.எஸ் கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர். பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல என்றார்.
உக்கடத்தில் கார் வெடித்த இடத்தில் கிடந்த பால்ரஸ்குண்டு, ஆணிகளை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார். கோவில் அருகே கிடந்ததாக மக்கள் எடுத்து கொடுத்த பால்ரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்தார்.