தமிழக செய்திகள்

‘எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது’ - நடிகை ரம்யா பாண்டியன்

டிரோல்கள் தன்னை பெரிதாக பாதித்தது கிடையாது என நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளிவெங்கட், வி.டி.வி.கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள 'அருள்வான்' படம் வரும் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘அருள்வான்’ படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நடிகை ரம்யா பாண்டியனிடம், ‘உங்களைப் பற்றி வரும் டிரோல்களை எப்படி கையாள்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “டிரோல்கள் என்னை பெரிதாக பாதித்தது கிடையாது. கேலி செய்பவர்களின் ஆக்‌ஷன் எனது கட்டுப்பாட்டில் இல்லை. எனது ரியாக்‌ஷன்தான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, டிரோல் செய்பவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன், தவிர்த்து விடுவேன்.

எந்த ஒரு இயக்குநரும், ‘இந்த நடிகையை டிரோல் செய்துவிட்டார்கள், இவர் நமது கதைக்கு வேண்டாம்’ என்று நினைக்கவில்லை. எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பிடித்தவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்கள், பிடிக்காதவர்கள் அவர்களுக்கு தெரிந்த விதத்தில் டிரோல் செய்கிறார்கள். அது என்னை பாதிப்பதில்லை” என்று தெரிவித்தார்.