தமிழக செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

குழந்தை இறந்த துக்கத்தில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த கூளூரை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி நளினி (வயது 27). சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. கிருத்திகா என பெயரிடப்பட்ட இந்த குழந்தை பிறந்த 54 நாட்களிலே இறந்துவிட்டது.

இதனால் மனமுடைந்த நளினி தீவிர மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கடந்த மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது உறவினர்கள் காப்பாற்றிய நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து நளினியின் தாயார் புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கனகம்மாசத்திரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT