கோவை,
இதோடு விட்டால் நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதியின் பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ. கனிமொழி பதிலளித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் அவர் அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷிடம், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, முதல்-அமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அரசியல் விமர்சனங்களை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம் என்று கூறினார்.
மேலும், “நேரம் சரியில்லை என்ன செய்வது. இதோடு விட்டால் நல்லா இருக்கும். தலைவர் பெயரை சொல்லி கூட பேசுங்கள். அதற்கு மக்கள் பதில் சொல்வார்கள். நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்தார்.