மதுரை,
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் புதூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியது தி.மு.க.வுக்குதான் இன்ப அதிர்ச்சி. மக்களுக்கு அல்ல. அரசு பணியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தூய்மை பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம், நர்சுகளுக்கு பணி நிரந்தரம், கல்விக்கடன் ரத்து ஆகியவற்றுக்கு பணம் இல்லை எனக்கூறிய முதல்-அமைச்சரிடம், இதற்கு மட்டும் எப்படி பணம் இருக்கிறது?.
திடீரென இந்த ஆண்டு மட்டும் கோடைகால சிறப்பு நிதி என சொல்வது சிரிப்பாக இருக்கிறது. மாணவர்களுக்குத்தான் கோடை கால சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். ஏன் மற்ற ஆண்டுகளில் கோடை இல்லையா? வெயில் இல்லையா? மக்கள் கஷ்டப்படவில்லையா?. கோடைகால தொகை என்பது புதுமாதிரியாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் 10 வாக்குறுதிகளால் தி.மு.க. கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. தி.மு.க. தங்கக்கட்டி கொடுத்தாலும் மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். அவ்வளவு கொதிப்பில் உள்ளனர். விஜய் பேசுவதெற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.