தமிழக செய்திகள்

ஐ.யூ.எம்.எல். கட்சியின் மகளிர் அணி முப்பெரும் விழா: அமைச்சர் ஷாஜஹான் பங்கேற்பு

திறன் பயிற்சியை முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

சென்னை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மீலாது நபி கொண்டாட்டம், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மாநில மகளிர் அணியின் கீழ் இயங்கும் ‘அயிஷா சென்டரில்’ திறன் பயிற்சியை முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

முப்பெரும் விழா

இந்த முப்பெரும் விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐ.யூ.எம்.எல். கட்சியினர் நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு மகளிர் அணி சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவர் பாத்திமா முசப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் அயிஷா மற்றும் எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.