தமிழக செய்திகள்

நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெளியே தெரியும் ஜெகன்மோகினி குகை

காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வர்.

தர்மபுரி,

ஜெகன்மோகினி குகை

தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வர்.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பெரிய பாணி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகன்மோகினி குகை வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஜெகன்மோகினி குகை, 1978-ம் ஆண்டு வெளியான ஜெகன்மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாறையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் இந்த குகை முழுவதும் நீரில் மூழ்கிவிடும். ஆனால் நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே இது மீண்டும் காட்சியளிக்கும். குகையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் 10 மீட்டர் தூரம் வரை உள்ளே சென்று வர முடியும். மேலும் அதன் அமைப்பையும், இயற்கை அழகையும் கண்டு வியப்படைந்தனர்.

தற்போது நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக உள்ளதால் பரிசல் ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை ஜெகன்மோகினி குகை வரை அழைத்து சென்று காட்டுகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.