சென்னை,
சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு அதிமுக, அமமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக வரும் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். முன்னதாக, தனது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வருத்தம் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா ‘ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது.
பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.