சென்னை,
பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் சாப்பிடச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.