சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான இணையதளங்களை முடக்குவதற்கும் சைபர் கிரைம் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. படம் இணையதளத்தில் வெளியாவதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் களத்தில் இறங்கினார்கள்.
இதற்கிடையில், 'ஜனநாயகன்' படத்தை இணையதளம் வாயிலாக பரவவிட்டதாக 6 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு 6 பேரும் இரவோடு இரவாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
'ஜனநாயகன்' படம் இணையதளங்களில் வெளியாவதற்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை சிறப்பு தனிப்படைகள் மூலம் தேடிவருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.