தமிழக செய்திகள்

ஜானகி அம்மாள் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

1988ம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக செயல்பட்டுள்ளார்.

சென்னை,

மறைந்த நடிகரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் 1988ம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ஜானகி ராமச்சந்திரன் 1996 மே 19ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஜானகி ராமச்சந்திரனுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் தமிழக முதல்வர், எங்கள் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் துணைவியார் ஜானகி இராமச்சந்திரன் அம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று, புரட்சித் தலைவரின் தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பைப் போற்றி வணங்குகிறேன்.

ஜானகி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2024-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு, அவர்தம் முழுவுருவப் படம் நமது தலைமைக் கழகக் கூட்ட அரங்கில் நிறுவப் பெற்றிருப்பதை இத்தருணத்தில் பெருமையொடு நினைவு கூர்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.