விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த பொங்கல் ரிலீசுக்கு திட்டமிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்று கிடைக்கவில்லை.
இதற்கிடையே, இந்த படம் சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்தது. தணிக்கை குழுவின் மறு ஆய்வில் உள்ள ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதையடுத்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் காவல்துறையில் புகாரளித்தது. இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம், ரஜினி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.