தமிழக செய்திகள்

ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு தளம்: தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்படும் படப்பிடிப்பு தளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் 15 ஏக்கரில் பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவில், 56 அடி உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்பு தளம் இந்தியாவிலேயே மிக உயரமானதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் படப்பிடிப்புத் தளத்தை திறந்து வைத்ததுடன், நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நாகரீக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றும், சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்குண்டு என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், திரைப்பட படப்பிடிப்பு தளங்கள் அதிகளவில் உருவாக வேண்டும். திரைத்துறையில் எம்ஜிஆர் அதிக புகழ் பெற்றதற்கு அவர் புரட்சி நடிகராக இருந்ததே காரணம். கடன் பெறாமல் கலைநிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி படப்பிடிப்பு தளத்தை ஃபெப்சி உருவாக்கியதற்கு பாராட்டுகள். இதேபோன்று தமிழகத்தில் மேலும் பல படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டால் தயாரிப்புச் செலவு குறையும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளதாகவும், திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியரஜன், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...