கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஜே.இ.இ. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி - மாணவர் எடுத்த விபரீத முடிவு

சமீபத்தில் ஜே.இ.இ. தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் மாணவர் தோல்வி அடைந்திருந்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (59 வயது). இவர் திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கீதா, நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் அபிநயா வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இன்னொரு மகள் ஆர்த்தி வெளியூரில் படித்து வரும் நிலையில், கடைசி மகன் கோகுல் (19 வயது) கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 முடித்திருந்தார்.

அதன் பிறகு ஜே.இ.இ. முதல் நிலை தேர்வுக்கு தீவிரமாக படித்து வந்தார். மேலும் இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ. தேர்விலும் பங்கேற்று எழுதினார். சமீபத்தில் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் கோகுல் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜே.இ.இ. முதல் நிலை தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.