சென்னை,
சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சிவரஞ்சினி (வயது 22). இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகும். சம்பவத்தன்று சிவரஞ்சினி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பினார்.
இந்த நிலையில், இவர் தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் இளம் பெண் சிவரஞ்சினி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
விடுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர், நகை திருடிய சின்ன போரூர் பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அதே தங்கும் விடுதியில் தங்கியிருந்த தனது காதலி சென்னை தி.நகரைச் சேர்ந்த ராதிகா (வயது 28) என்பவரின் ஆலோசனைப்படி நகையை திருடியதை அவர் ஒத்துக்கொண்டார்.
சிவரஞ்சினியின் நகையை திருடுவதற்கு உடந்தையாக இருந்த தனசேகரின் காதலியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராதிகாவை நேற்று கைது செய்த போலீசார், அவரைப் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விடுதியில் இளம்பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.