ஆவடியை அடுத்த பொத்தூர் ஸ்ரீசாய் சக்தி நகரைச் சேர்ந்தவர் செரீஷ் டேனியேல் (வயது 42). பிசியோதெரபி டாக்டரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜ் தெரேசா. டாக்டரான இவரும், அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். நேற்று முன்தினம் காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். மதியம் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், டாக்டர் தம்பதிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் செரீஷ் டேனியேல் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 12 பவுன் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.