தமிழக செய்திகள்

விளாத்திகுளம் அருகே வியாபாரி வீடுபுகுந்து 10½ பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

விளாத்திகுளம் அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 10½ பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தடிவருகின்றனர்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தடிவருகின்றனர்.

வியாபாரி

விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மகன் கந்தவேல் (வயது 54). வியாபாரி. சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இங்கு பருத்தி வியாபாரம் செய்து வருகிறார்.

கந்தவேல் இரவில் குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடியில் உள்ள அறையில் அவரும், குடும்பத்தினரும் தூங்கியுள்ளனர்.

நகைகள்-பணம் கொள்ளை

நேற்று காலையில் மாடியில் இருந்து கீழே வந்த கந்தவேல் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிகரமாக நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT