தமிழக செய்திகள்

காதர் மொகதீன் மகன் மரணம்; எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பவர் காதர் மொகிதீன். இவரின் மகன் கலீலூர் ரஹ்மான் மருத்துவராக இருந்தார். சமீபகாலமாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். ஐயூஎம்எல் தமிழ்நாடு தங்களின் எக்ஸ் பக்கத்தில் அவரின் மறைவு செய்தியை வெளியிட்டனர். அவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார். இதேபோல அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன் என எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.