கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் திருமணமான புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுஜிதா (வயது 25), பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி. இவர் சின்னசேலம் அருகே வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தினேஷ்(27) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜிதா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குதித்து சுஜிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.