சென்னை,
தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், தவெகவின் அவினாசி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். கமலி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு கால்நடைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 28 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.எல்.ஏ.க்களாக பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் மற்றும் அவினாசி எம்.எல்.ஏ. கமலி ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.
அவினாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல். முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் கமலி. முன்னதாக, மே 10-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 29 வயதான கீர்த்தனா அமைச்சராகப் பதவியேற்றார். இவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஆகியோரை தோற்கடித்திருந்தார்.
மேலும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 31 வயதான ரமேஷும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அறந்தாங்கி முகமது ஃபர்வாஸ், தாம்பரம் சரத்குமார், கிணத்துக்கிடவு விக்னேஷ் உள்ளிட்ட இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.