காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு கட்ட பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ராம்ஜி தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 50). இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு சந்துரு, முனுசாமி (25), சதீஷ் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது 2-வது மகன் முனுசாமி. அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனக்கு வீடு கட்டுவதற்காக இடம் தர வேண்டும் அல்லது இடம் வாங்க பணம் தர வேண்டும் என்று கூறி, கடந்த சில நாட்களாக முனுசாமி தனது தந்தை சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் தந்தையுடன் தகராறு செய்தார். இதில் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.
ஆத்திரம் அடைந்த முனுசாமி, சதீஷை நோக்கி மினி லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதனை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டார். இதில் சத்யா லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய முனுசாமியை தேடி வந்தனர். மண்ணூர் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.