தமிழக செய்திகள்

முத்தலாக் தடை சட்டம்: முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் சட்டமாக தெரியவில்லை கனிமொழி எம்.பி. பேச்சு

‘முத்தலாக்’ தடை சட்டம் முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் சட்டமாக தெரியவில்லை என கனிமொழி எம்.பி. கூறினார்.

தாம்பரம்,

முத்தலாக் தடை சட்டம் என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்றார்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. எம்.பி. கனிமொழி, வன்னியரசு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் திடீரென இஸ்லாமிய சகோதரிகளுக்காக முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

எதிர்ப்பு ஏன்?

இஸ்லாமிய சகோதரர்களை சிறைக்கு அனுப்பக்கூடிய ஒன்றாகத்தான் இந்த சட்டம் உள்ளது. பெண்களை பாதுகாக்கும் சட்டமாக இது தெரியவில்லை. ஒரு மதத்தை சேர்ந்தவர்களை மிரட்டி பார்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த சட்டத்தின் பின்னால் தெரிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது. ஏற்கனவே மாநிலங்களவையில் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. இந்த சட்டம் மூலம் முஸ்லிம் குடும்பங்களை சிதைக்கவும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யக்கூடிய வாய்ப்பும் ஏராளமாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த சட்டத்தை எதிர்க்கிறோம். மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படும் போது இதை அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு