தமிழக செய்திகள்

கன்னியாகுமரி: விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது; ரூ.1 லட்சம் அபராதம்

வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத்துறையினர் பொய்கைக் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 24), சுரேஷ்(40) ஆகிய 2 பேரும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் அன்பு உத்தரவின்படி, பிடிபட்ட 2 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 2 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.