புதுச்சேரி,
காரைக்காலில் இந்திய கடலோர காவல்படையினர் இன்று பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் சென்றனர்.
அவர்களுக்கு கடலில் தத்தளிக்கும் மீனவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது எப்படி என்பதை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் கப்பலை சுற்றிவளைத்து சரணடைய செய்வதையும் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர். இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரி நாட்டு கப்பலை ராக்கெட் லாஞ்சர் மற்றும் அதிவேக இயந்திர துப்பாக்கி மூலம் வீழ்த்துவதையும் நிகழ்த்தி காண்பித்தனர். இவற்றை பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.