தமிழக செய்திகள்

சென்னையில் 16-ந் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியாகாந்தி தலைமையில் தலைவர்கள் அணி திரள்கிறார்கள்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றன. சோனியாகாந்தி தலைமையில் தலைவர்கள் அணி திரள்கிறார்கள்.

சென்னை,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வரும் 10-ந் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற உறுதியான தகவல் நேற்று வெளியானது.

தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

அன்றைய கூட்டத்தில் பங்கேற்றும் மு.க.ஸ்டாலின், ஆலோசனை கூட்டம் முடிந்ததும், அனைத்து தலைவர்களையும் சந்தித்து, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் வேகமாக தயாராகி வருகின்றன.

டிசம்பர் 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிலை திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நடைபெறுகிறது.

சோனியா

16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலய வளாகத்தில் சோனியாகாந்தி திறந்துவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து கூட்டணி கட்சிகள்

இதேபோல், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு நிகழ்ச்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூடியிருக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் அனைத்து தலைவர்களும் அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு காரில் வர இருக்கின்றனர்.

தேர்தல் பிரசாரம் தொடக்கம்

மாலை 6 மணியளவில், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் தொடங்க இருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று பேசும் தலைவர்கள், முதலில் கருணாநிதி உடனான மலரும் நினைவுகளை தெரிவிக்க இருக்கின்றனர். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் அந்த மேடையிலேயே தொடங்க இருக்கின்றனர்.

அதாவது, இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தை தொடங்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு அச்சாரமாக கருணாநிதியின் சிலை திறப்பு விழா அமைய இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் களமும் தமிழகத்தில் இருந்து சூடுபிடிக்க தொடங்குகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்