தமிழக செய்திகள்

கருணாநிதியின் நினைவுதினம்: நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி! - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

கலைஞர் உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது

கலைஞர் கருணாநிதி

திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

அவர்தான் நமக்கு எல்லாம்

எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்!

13 முறை சட்டமன்ற உறுப்பினர்!

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!

அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!

நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!

அரசியலும் ஆட்சியும்,

கலையும் இலக்கியமும்,

திரையும் நாடகமும்,

சின்னத்திரையும்

சமூக வலைத்தளமும் என

அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!

கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!

அவர்தான் நமக்கு எல்லாம்!

அவரின்றி நாம் இல்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.