கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கரூர், விராலிமலை சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு தடையை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

கரூர், விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அதன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

5 தொகுதிகள்

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதேநேரம், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜய பாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தனித்தனியாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அறிவிப்புக்கு தடை

இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கரூர், விராலிமலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், “விராலிமலை தொகுதியில் எனக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த த.வெ.க., வேட்பாளர் முருகேசன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யவில்லை. தி.மு.க. வேட்பாளர் செல்லபாண்டியன்தான் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வாய்ப்பு இல்லை

ஒருவேளை தேர்தல் வழக்கு வெற்றி பெற்றாலும், தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற்றவராக ஐகோர்ட்டு அறிவிக்க வாய்ப்பில்லை. மேலும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கு முதல் நாளில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அதனால், விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்கவேண்டும். விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல, கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.