தமிழக செய்திகள்

கடனாக பெற்ற 10 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா தரப்பு பதில்

சினிமா பைனான்சியரிடம் கடனாக பெற்ற 10 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் பேத்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையைத் தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் எனக் கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால், வழக்கைத் தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 லட்சம் ரூபாய் மட்டுமே போத்ராவிடம் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடன் பெறுவதற்காகக் கொடுத்த வெற்றுக் காகிதத்தில், பணத்தைத் தராவிட்டால் ரஜினி தருவார் என போத்ராவே எழுதிக் கொண்டதாகவும் கஸ்தூரி ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 65 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ககன் போத்ராவுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது