தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த நிலையில், கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று இலங்கை அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சென்னை வந்துள்ள இலங்கை மந்திரி சுந்தரலிங்கம் பிரதீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது. உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அரசியலுக்காக இதுகுறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த உண்மையை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஐயப்ப யாத்திரைக்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இலங்கையில் இருந்து ஆண்டு தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் கேரளா சபரிமலை வருகிறார்கள். ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரிக்க கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர் என்றார்.