தமிழக செய்திகள்

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ஆவணம்-29 இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும்போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டது.

கீழடி அகழ்வாராய்ச்சி

அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு தான் தமிழ் மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது.

மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு,விட்டு வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT