தமிழக செய்திகள்

தேனி செல்லும் கேரள அரசு பஸ் திடீர் நிறுத்தம்; தோட்ட தொழிலாளர்கள் அவதி

சம்பந்தப்பட்ட அரசு பஸ் நஷ்டத்தில் இயங்கியதால் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூணாறு,

இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் இருந்து ராஜாக்காடு வழியாக தமிழ்நாட்டின் தேனி நகருக்கு கேரள அரசு பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. தினமும் பகல் 12.55 மணிக்கு தொடுபுழாவில் இருந்து புறப்படும் இந்த பஸ், அடிமாலி மற்றும் ராஜாக்காடு வழியாக மாலை 6.45 மணிக்கு தேனியை சென்றடைந்து வந்தது. இதனைத்தொடர்ந்து, தேனியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் அந்த பஸ், பூப்பாறை மற்றும் ராஜாக்காடு வழியாக கோட்டயம் நகருக்கு சென்று வந்தது.

இந்தநிலையில், இந்த பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ராஜாக்காடு, பூப்பாறை, அடிமாலி பகுதிகளில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது. 'சம்பந்தப்பட்ட அரசு பஸ் நஷ்டத்தில் இயங்கியதால் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது அந்த பஸ் எர்ணாகுளம் நகரில் இருந்து நேரடியாக தேனி நகருக்கு இயக்கப்பட உள்ளதாகவும், விரைவில் புதிய சேவை தொடங்கப்படும்' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.