சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்தியலிங்கம் கூறியதாவது:-
கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார். இதன்பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
துணை முதல் அமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்தது திமுக. அதிமுக, இரட்டை இலை வழக்கில் சட்டப்போராட்டம் தொடர்கிறது.
பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுத்திருக்கும் கொடநாடு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2019ஆம் ஆண்டு தெகல்ஹா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பேட்டியில், சயானும் அவரது நண்பருமான வாளையார் மனோஜும் பேசியிருந்தனர். அதில், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர். இதற்காக, சயான், மனோஜ், மேத்யூ சாமுவேல் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்தன.