தமிழக செய்திகள்

கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

இந்த சிட்டி வியூ பாயிண்ட் பகுதி மிகக் செங்குத்தான, ஆழமான மலைச்சரிவில் அமைந்துள்ளது.

கொடைக்கானல்,

கொடைக்கானல்: சிட்டி வியூ பாயிண்ட்டில் பாதுகாப்பு வேலி அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

சிட்டி வியூ பாயிண்ட்

மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கொடைக்கானல் நகரின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள செண்பகனூர் சிட்டி வியூ பாயிண்ட் (City View Point) பகுதிக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிரடியாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

மலைச்சாலையின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த வியூ பாயிண்டில் இருந்து பார்த்தால், வைகை அணை, பெரியகுளம், தேனி மற்றும் கொடைக்கானல் மலைப்பாதையின் வளைவுகளும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பள்ளத்தாக்குகளும் ஒரே பார்வையில் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

தற்போது நிலவி வரும் இதமான குளு, குளு சீதோஷ்ண நிலையால், இப்பகுதியை அடிக்கடி மேக கூட்டங்களும், பனிமூட்டமும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே செண்பகனூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பாதுகாப்பு வேலி

இந்த சிட்டி வியூ பாயிண்ட் பகுதி மிக செங்குத்தான, ஆழமான மலைச்சரிவில் அமைந்துள்ளது. இவ்வளவு அபாயகரமான இடத்தில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக எந்தவொரு தடுப்பு சுவரோ அல்லது இரும்பு பாதுகாப்பு வேலியோ அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு வரும் பயணிகள் மற்றும் சிறுவர்கள் தவறி கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆபத்தை உணராமல் பலர் சரிவின் விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உடனடியாக இங்கு பலத்த பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றூம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை

மது அருந்தாமலும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க இந்த பகுதியில் நிரந்தரமாக பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.