சென்னை,
கோடை காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் ஓட்டல் தமிழ்நாடு "கொங்குநாடு உணவுத் திருவிழா–2026" தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
இந்த உணவுத் திருவிழா நாளை மறுதினம் முதல் 17-ந்தேதி வரை தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சென்னை தீவுத்திடல் டிரைவின், மாமல்லபுரம், ராணிப்பேட்டை, ஆலயம் காஞ்சீபுரம், திருச்சி, சிதம்பரம், ஒகேனக்கல், திருக்கடையூர், திருவண்ணாமலை, ஓசூர், ஏற்காடு, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், திருச்செந்தூர், திருநெல்வேலி, குற்றாலம், கோயம்புத்தூர், ஊட்டி உள்ளிட்ட ஓட்டல் தமிழ்நாடு கிளைகளில் நடைபெறும்.
கொங்குநாட்டு பாரம்பரிய சமையல் முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், நாட்டுப்புற மூலப்பொருட்கள் மற்றும் இயற்கை மணம் மிக்க சுவைகளுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. "நம் மண்… நம் சுவை… நம் பாரம்பரியம்…" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழா, தமிழர் பாரம்பரிய உணவு மரபுகளையும், கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாத்து பரப்பும் முயற்சியாக அமைகிறது.
எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உணவுப் பிரியர்கள் அனைவரும் உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டு கொங்குநாட்டின் தனித்துவமான சுவைகளை அனுபவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.