கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசாலை காமராஜர் 1-வது சாலையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குள் நுழைந்த கரடி. அங்கு சாமி கும்பிடுவதற்காகவும், விளக்கு ஏற்றுவதற்காகவும் பக்தர்கள் பாட்டில்களில் வைத்திருந்த பூஜை எண்ணெய்யை எடுத்து மிக லாவகமாக குடித்துள்ளது. அதன் பிறகு, உடனே வனப்பகுதிக்குள் செல்லாமல் அந்த குடியிருப்பு பகுதியிலேயே கரடி நீண்ட நேரமாக சுற்றி திரிந்தது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கரடிகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டு பிடித்து உடனே அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.