தமிழக செய்திகள்

10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி நாளை திறக்கப்படும் - வனத்துறை அறிவிப்பு

அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் அதிகளவு வருகின்றனர். கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.

கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குளித்து முடித்ததும், வனத்துறை வாகனத்தில் மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்படி கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி 11-ந்தேதி(நாளை) முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.